The Robbers Chain Snatching 2nd day in Perambalur area
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையிலுள்ள, அசோக் நகரில் வசிப்பவர் தினேஷ் மனைவி சத்தியபாமா (வயது 31), தினேஷ் பர்னிச்சர் கடை நடத்தி
வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த நிறைமாத கர்ப்பிணியான சத்தியபாமா வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டை பூட்டி விட்டு சாவியை கணவர் வந்து திறந்து கொள்வதற்கு ஏதுவாக, பூட்டிலேயே வைத்து விட்டு, காற்றோற்றத்திற்காக வீட்டின் முன் பகுதியில் ஏர் கூலரை வைத்து கண்ணயர்ந்து தூங்கியுள்ளார்.
இதனை சாதகமாக்கி கொண்ட டவுசர் கொள்ளையர்கள் சாவியை எடுத்து பூட்டை திறந்து வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து தலா ஒரு பவுன் கொண்ட இரண்டு மோதிரங்கள், 10 ஆயிரம் மதிப்புள்ள ஒரு வெள்ளி அரைஞாண் கொடி மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்து கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து சத்தியபாமாவின் கழுத்திலிருந்த 8 பவுன் தாலி கொடியை பறித்துள்ளனர்.
தனது கழுத்திலிருக்கும் தாலி கொடியை யாரோ இழுக்கின்றனர் என்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்து சத்தியபாமா சத்தம் போட்டுள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட டவுசர் கொள்ளையர்கள் சங்கிலியை பறித்து கொண்டு, சத்தியபாமாவை கீழே இடித்து தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடி தலை மறைவாகினர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சத்தியபாமாவை மீட்டு சம்பவம் குறித்து தினேஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பதறியடித்து கொண்டு வீட்டிற்கு சென்ற தினேஷ் தனது மனைவிசத்தியபாமா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் நைனாம்பாள் என்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.