The demand to provide menstrual cups to women in Tamil Nadu, as in the case of protection of the environment
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு கேரளாவை போன்று தமிழகத்திலும் பெண்களுக்கு இலவசமாக (மாதவிடாய்) மென்சரல் கப்-களை வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதனால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நாப்கின் வாங்கும் செலவும் பல மடங்கு குறையும் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 121 மில்லியன் பெண்கள் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், சுமார் 80 மிலி அளவு உதிரப்போக்கு ஏற்படுகிறது. மாதவிலக்கின் போது நாள் ஒன்றுக்கு ஒரு பெண் சராசரியாக 5 முதல் 7 மிலி உதிரம் நாப்கின்களில் ஈர்க்கிறது. இப்படி பயன்படுத்தப்படும் நாப்கின்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 113 லட்சம் டன் குப்பைகளை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒரு நாப்கின் மட்கிப்போக சுமார் 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.. இதனை சுமார் 800 டிகிரி வெப்பத்தில் 4 முதல் 5 நிமிடம் எரித்தால் டாக்சின் போன்ற நச்சு வாயுக்களையும் வெளியேற்றும். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. ஆனால், நாப்கின்களை போல அல்லாமல் மென்சரல் கப்-களை சுமார் 10 ஆண்டுகள் வரை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த முடியும். இதனால் பல மடங்கு ரூபாய் நாப்கின்கள் வாங்கும் செலவு குறைவதோடு சுற்றுச்சூழலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. சிறியதாக இருப்பதால் எங்கும் எடுத்து செல்ல முடியும். கையடக்கமாக கைப்பை பர்ஸ் போன்றவற்றிலும் வைத்துக் கொள்ள முடியும். எனவே, கேரளாவை போன்று தமிழக பெண்களுக்கும் மென்சரல் கப்புகளை அரசு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.