Struggle to return the voter’s identity card to remove the liquor shop in ramnad
ராமநாதபுரம் மாவட்டம் சின்னதொண்டி கிராமத்தில் மக்களுக்கு இடையுறாக உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி அக்கிராம மக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்பைக்கும் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சின்னதொண்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தில் கோயில், பள்ளி, ரேசன் கடை, பெண்கள்குளிக்கும் குளம் உள்ளது.
இப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளதால் மதுபானம் அருந்த வருபவர்களால் பள்ளிசெல்லும் குழந்தைகள், குளத்தில் குளிக்க வரும் பெண்கள் ஆகியோருக்கு தினமும் இடையுறு ஏற்படுகிறது.
சிலர் குடித்துவிட்டு கோயிலில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் கோயில் புனிதம் கெடுகிறது. எனவே இங்கு செயல்படும் மதுபான கடையை எடுக்க வேண்டும் என கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள் திரளாக தாசில்தார், கலெக்டர் என அனைவரையும் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் தங்கள் வாக்குரிமையை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்து தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் வழங்கும் போராட்டத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தினர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் திரளாக குவிந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் பேசி விரைவில் மதுபான கடையை இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தப்பின் பிற்பகல் மக்கள் கலைந்து சென்றனர்.
செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்