Special grievance camp for disabilities in Perambalur collectorate

மாற்றுத்திறனாளிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகின்றது. அரசின் திட்டங்கள் குறித்து விளக்கவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு குறைதீர்ர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் ஓய்வூதியம், உபகரணங்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மாற்றுத்திறனாளிகள் 17 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மனுக்களை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்றைய முகாமில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட தலா ரூ.58,840 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் 3 நபர்களுக்கும், தலா ரூ.6,940 மதிப்பிலான மூன்று சக்கர வண்டி 6 நபர்களுக்கும், பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.3,000 மதிப்பிலான காசோலை 1 நபருக்கும், சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் மானிய உதவித்தொகையாக தலா ரூ.10,000 வீதம் 4 நபர்களுக்கு ரூ.40,000 மதிப்பிலான காசோலைகளையும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத பங்குத்தொகைகள் 6 நபர்களுக்கு ரூ.55,000 மதிப்பிலான காசோலைகள் என மொத்தம் 30 நபர்களுக்கு ரூ.3.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், முகாமில் மனுகொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை எலும்பு முறிவு மருத்துவர் ஜெகதீசன், கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைத் தீர்க்கும் சிறப்பு முகாம்கள் ஜுன் மாதத்தில் 04.06.2018 அன்றும், ஆகஸ்ட் மாதத்தில் 06.08.2018 அன்றும், அக்டோபர் மாதத்தில் 01.10.2018 அன்றும், டிசம்பர் மாதத்தில் 03.12.2018 அன்றும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!