பெரம்பலூர் : இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நாளை மறுநாள் மே.31 அன்று காலை 10.00 மணி அளவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழி காட்டுதலின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புதிய தொழில் முனைவோர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும் மற்றும் வங்கி கடன்கள் குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்படும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடுபவர்களுக்கு 6 நாட்கள் எங்களது பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் முறை பற்றியும், வங்கிகளில் வணிக கடன் பெறும் முறைகளை பற்றியும் மற்றும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கான அரசு மானியத்துடன் கூடிய கடன் பெறும் முறைகளை பற்றிய தகுந்த ஆலோசனைகளும் வழங்கபடும்.
இந்த முகாமில் 18 வயதிற்கு மேல் உள்ள ஆண்,பெண் இருபாலரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.