Reliance Super Market fines for carry bag: Nellai court
கேரி பேக்கிற்கு பணம் வசூலித்ததால் திருநெல்வேலி ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் கடந்த 22.09.15 அன்று 821 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். தொடர்ந்து பொருட்களை வைக்கும் கேரி பேக்கிற்கு 6 ரூபாய் ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த முத்துக்கிருஷ்ணன் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி நிறுவன விளம்பரம் அச்சிடப்பட்ட கேரி பேக் கவரை 6 ரூபாய்க்கு வழங்கியிருப்பது சேவை குறைபாடு தான் என்றும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் மேலும் வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் என மொத்தம் 8 ஆயிரம் ரூபாயை 1 மாத காலத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் 6 சதவிகித வட்டியுடன் முத்து கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.