Rational and Reformation and Spread over Anna: R. Vathilingam MP speech at Perambalur on Anna;s Birthday

பெரம்பலூர் வானொலித் திடலில் அண்ணாவின் 110 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி தலைமையில் நடைபெற்றது. அதில் அஇஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்பு செயலாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது :

சிந்திக்க கூடிய, பிறருக்கு அறிவுரை சொல்லக் கூடிய, ஒரு நல்ல சொற்பொழிவையும், கொடுக்கும் பேரறிவாளர்தான் பேரறிஞர் அண்ணா, 1909 ஆம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் பயின்று, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து, எம்.ஏ பொருளாதாரம், எம்.ஏ வரலாறு, எம்.ஏ அரசியல், என தன்னுடைய அறிவுத் திறமையால் உலக மொழி தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். முத்தையா செட்டியாரை அணுகி வேலை கேட்ட போது, பெரியாருடைய பகுத்தறிவு, சிந்தனை, சமுதாய புரட்சி ஆர்வம கொண்டு, 1936 -ல் பெரியாரை சந்திக்க கூடிய வாயப்பு அண்ணாவிற்கு கிடைக்கின்றது. அது முதல் வேலை தேடும் பணியை விட்டு உதறி தள்ளிவிட்டு, பெரியாரோடு இணைந்து, நீதிக்கட்சியிலே பணியாற்றுகிறார். 1938 – 39 -ல் மத்திய அரசு இந்தி திணிப்பை எதிர்த்து போராடினார். அப்போது வயது அவருக்கு வயது 28. நீதிக்கட்சியின் செயல்பாடுகள் தந்தை பெரியாருக்கு பிடிக்காமல், விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்து, அதற்கு பிறகு 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தை பெரியார் துவக்கிய போது, அவருக்கு தோளோடு தோள் நின்று அவர் வாயாலேயே தளபதி அண்ணா என்று அழைக்கக் கூடிய அளவிற்கு, தன்னுடைய சொல்லாற்றலால், செயலாற்றலால், கட்சி தொண்டர்கள் இடத்தில், அரவணைத்து சென்ற பாங்கால் உயர்ந்து நின்றவர் பேரறிஞர் அண்ணா.

ஈரோடு மாநாட்டில் அண்ணா தீர்மானம் என்றே கொண்டு வந்தார். தேரிலே உட்காரவைத்து, ஊர்வலமாக தந்தை பெரியார் அண்ணாவை அழைத்து சென்ற காட்சி அன்றைய குடியரசு பத்திரிகையில் மிக அழகாக எழுதி இருப்பார்கள். அப்படி, தந்தைக்கு ஏற்ற சிஷ்யனாக பட்டி தொட்டியெல்லாம் பகுத்தறிவையும், சீர்திருத்தத்தையும், சமூக திருத்தத்தையும் பரப்பிஈ பெரியாரின் எழுச்சி மிகுந்த தளபதியாக வலம் வந்தவர்தான் பேரறிஞர் அண்ணா.

பொருந்தா திருமணத்தை பெரியார் ஏற்படுத்திய போது அதை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 செப்டம்பர் 17ம் தேதி தொடங்கினார். அன்றைக்கு அண்ணாவிற்கு வயது 40. பின்னர் 18 ஆண்டுகளில் 1967 ல் திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்.

அண்ணாவிற்கு என்று தனி சிறப்பு உண்டு. திறமை எங்கிருக்கிறதோ, தகுதி எங்கிருக்கிறதோ, செயல்பாடுகள் நிறைந்தவர்கள் யாரோ, அவர்களை அரவணைத்து, ஊக்கம் கொடுத்து, ஆக்கம் கொடுத்து, கட்சியை வலிமையாக்கியவர் பேரறிஞர் அண்ணா.

1953-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர் திமுகவில் இணைகிறார். அதுவரை கதர் சட்டையும், ருத்திராட்சித மாலையும் அணிந்திருந்தார். திமுக-வை வளர்த்தவர் அண்ணா. அதற்கு துணை நின்றவர் எம்.ஜி.ஆர்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு சொற்பொழிவும், கவிதையும், கட்டுரையும், சிறுகதையும், நாவலும், நாடகமும், அவர் நடிப்பும் உதவியதோ, அதை போல், புரட்சித் தலைவருடைய சினிமா, அவர் செய்த நன்கொடை, எங்கு புயல் அடித்தாலும், எங்கு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அங்கெல்லாம் ஓடிச் சென்று, அன்றைக்கு ஆயிரம் என்றால் இன்றைக்கு 10 லட்சம். அன்றைக்கு 50 ஆயிரம் என்றால் இன்றைக்கு 5 கோடி, 25 ஆயிரம், 50 ஆயிரம் என அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

பேரறிஞர் அண்ணா 1967 இல் முதலமைச்சர் ஆகிறார். மாலை மரியாதைகள், சால்வைகள் அறிஞர் அண்ணாவிற்கு அணிவிக்கின்றார்கள். அண்ணா சொன்னார்: இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல!. எம்.ஜி.ஆர் வெற்றி, அவருக்கு சென்று மரியாதை செய்யுங்கள் என சொல்லுகிறார். கட்சியில உள்ளவர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்வதில் அண்ணாவிற்கு நிகர் அண்ணாதான். அண்ணா தோற்றுவித்த திமுக சிதற காரணமே மறைந்த பெரியவர் கருணாநிதிதான் காரணம். ஏனென்றால், அவர் இறந்து விட்டார். அவரை விமர்சிப்பது முறையாகது. எம்.ஜி.ஆர், சம்பத், வைகோ போன்றவர்கள் திமுக வை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். கருணாநிதி திமுகவை குடும்பக் கட்சியாக மாற்றினாலும், அண்ணா நினைத்த கட்சிதான் இன்றைய அதிமுக என பேசினார்.

முன்னதாக, மாவட்ட அவைத் தலைவர் இரா.துரை, மாவட்ட பொருளாளர் ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்),டி.என். சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.பிக்கள் ஆர்.பி.மருதைராஜா, மா.சந்திரகாசி, மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், சிறப்பு பேச்சாளர்களாக நட்சத்திர பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து, தீப்பொறி.அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர், அணிப் பொறுப்பாளர்கள், பலர் கலந்து கொண்டனர். நகர இணை செயலாளார் எழிலரசி ராவணன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!