NEET Exam In the Namakkal district, Write of 5,560 people, including 255 government students
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) நாளை ஏப் 6-ந் தேதி நடக்கிறது.
இத்தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் நேஷனல் பப்ளிக் பள்ளி, டிரினிடி அகாடமி, பாரதி அகாடமி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, நவோதயா அகாடமி மற்றும் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இடங்களில் 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 5,560 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 255 மாணவ மாணவிகளும் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் நாமக்கல் மாவட்டத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று 6-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே ஹால் டிக்கட் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் மாணவ மாணவிகள் வரவேண்டும்.
கால தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுதுபவர்களுக்கான விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.