Natural Medical Day Celebration at Namakkal Government Hospital

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் இயற்கை மருத்துவ தின விழா நடைபெற்றது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவ தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி இயற்கை மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில் குமார் வரவேற்றார்.ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் உஷா முன்னிலை வகித்தார்.

விழாவை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சென்னை ருக்மணி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து பேசியதாவது:

இயற்கை மருத்துவம் என்பது இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறை தத்துவம். பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டு எளிய இயற்கையான சிகிச்சைகளை அளிப்பதே இயற்கை மருத்துவம். மேலும் பக்க விளைவுகள் இல்லாத சிக்கனமான மற்றும் முழுமையான மருத்துவமாகும்.

நம் உடல் பஞ்சபூதங்களான காற்று, நீர், மண், நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றால் ஆனது. இந்த பஞ்சபூதங்களின் உயிராற்றல் செறிவே உடலின் உயிராற்றல் ஆகும். இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை என்பது நோய்க்கு அலலாமல் நோயாளிக்கு அளிக்கப்படுகிறது.

இயற்கை மருத்துவமானது உடல், மனம், ஆன்மா என அனைத்தையும் ஒன்றடக்கிய மருத்துவ முறையாகும். உயிருள்ள உணவுகளான பச்சை காய்கறிகள், பழங்கள், முளைவிட்ட தானியங்கள் போன்றவை அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மூட்டுவலி, உடல் பருமன், ஜீரண கோளாறுகள், தலைவலி, சர்கரை நோய், தோல் வியாதிகள், கழுத்து வலி, ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. எனவே இயற்கை மருத்துவத்தை பின்பற்றி சிறந்த நிவாரணம் பெறலாம் என பேசினார்.

இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உணவுகள், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

விழாவில் நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் செல்வக்குமார், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி ஆயுஸ் மருத்துவ அலுவலர்கள் சதீஸ்குமார், கார்த்திகேயன், எர்ணாபுரம் ஆயுஸ் மருத்துவ அலுவலர் பூபதிராஜா, டாக்டர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!