Namakkal district retirees at the redressal day meeting: Collector Announcement
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் விடுத்துள்ள தகவல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், சென்னை, ஓய்வூதிய இயக்குநரக அலுவலர்கள் முன்னிலையிலும்நடைபெறுகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின் அக்குறைகள் குறித்த விண்ணப்பங்களை தேவையான இணைப்புகளோடு 3 பிரதிகளில் வரும் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு(கணக்குகள்)வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும்.
இவ்விண்ணப்பத்தில் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் இ-மெயில் மற்றும் செல்போன் எண் முதலானவை இருந்தால் அவற்றையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பிய ஓய்வூதியர்கள் தவறாமல் கூட்ட நாளன்று மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்ள இயலாத ஓய்வூதியர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் கலந்து கொண்டு அவர்களது குறைகளை நீக்க முறையீடு செய்யலாம்.
மனுதாரர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் அவரது மனுவில் கண்ட குறைகள் சரிசெய்யப்பட்டுவிட்டதாக கருதப்படும். கடந்த முறை விண்ணப்பம் அளித்து குறைகள் தீர்வு செய்யப்படாமல் இருந்தால் தற்போது மீண்டும் புதிதாக விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.மேலும் இக்குறைதீர் நாள் கூட்டத்திற்கு முன்னதாக வரும் 18ம் தேதிகாலை 11.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முன்பாக நடைபெறும் முன் ஆய்வுக் கூட்டத்தில் துறை அலுவலர்களோடு நாமக்கல் மாவட்ட ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம். இம்முன் ஆய்வுக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் கலந்து கொள்ள வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளார்.