Namakkal court verdict; Life imprisonment for worker murder case
நாமக்கல் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் உறவினருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சமயசங்கிலி பெருமாள்கோயில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). தறிப்பட்டறை தொழிலாளி. ஆவத்திபாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (50). இருவரும் உறவினர்கள். ராமமூர்த்தியிடம் பழனிசாமி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் பழனிசாமி இழுத்தடித்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2014 ஜனவரி 21ம் தேதி ஏற்பட்ட தகராறில், ராமமூர்த்தியை கல்லால் தாக்கி பழனிசாமி கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிபாளையம் போலீசார் பழனிசாமியை கைது செய்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார். இதில் கொலை செய்த பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.