Murugankudi Mariamman temple chariot; A large number of devotees participated
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
முருக்கன்குடியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதமும் தேர் திருவிழா நடைபெறும் அதன்படி கடந்த சித்திரை 19ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா இன்று தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி காலை மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க அம்மன் சிலை திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர்.
இந்த தேரோட்ட விழாவில் முருக்கன்குடி, நமையூர், கீழப்புலியூர் கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலீசார் செய்து இருந்தனர்.