MPs suspended: Central government has insulted Tamilnadu people – PR Pandian interview
நாமக்கல், ஜன.2: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் தமிழக மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்தும், தமிழக எல்லையான ராசிமணலில் அணை கட்ட வலியுறுத்தியும் வி்யாழக்கிழமை(ஜன.3) ஓசூரிலிருந்து விவசாயிகளுடன் பேரணியாகச் சென்று மேக்கேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிவித்திருந்தார்.
இதன்படி விவசாயிகளுடன் நாமக்கல் வழியாக புதன்கிழமை மாலை ஓசூர் சென்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக மத்திய அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட, தமிழகத்தை அழிப்பதற்கு அனுதி வழங்கி இருப்பதை கண்டித்து போராட்டம் வலு பெற்றுள்ளது.
20 நாட்களுக்கு மேலாக பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு தமிழக நாடளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சஸ்பெண்ட் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட சட்டத்திற்கு புறம்பாக கொடுத்த அனுமதியை ரத்து செய்யாத மத்திய அரசு, சட்டத்திற்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் தமிழக மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது.
மேக்கேதாட்டுவி்ல் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒசூரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தி்ல் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்கின்றனர் என்றார்.
முன்னதாக பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்தததை கண்டித்து சிறிது நேரம் முழக்கம் எழுப்பினர்.