Minorities Welfare Department director inspection in Namakkal
நாமக்கல்லில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர்வள்ளலார் பங்கேற்று பேசியதாவது:
சிறுபான்மையினர் நலத் துறைக்கு மாநில மற்றும் மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் கடன், கறவைமாடு கடன், ஆட்டோ கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுகடன், கல்விக் கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையின மக்கள் திட்டங்கள் மற்றும் கடனுதவி களைப் பெற்று பொருளாதாரத்தில் மென்மேலும் வளர வேண்டும் என பேசினார்.பின்னர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 573 வீதம் ரூ. 42 ஆயிரத்து 876 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் வழங்கினார்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குநரின் நேர்முக உதவியாளர் விக்னேஸ்வரன், நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் பதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகா ராணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், கிறிஸ்தவர்கள், உலமாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், கிறிஸ்தவ பள்ளிகளின் தாளாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.