MGR 101th Birthday Celebration: Minister Manikandan Hosting flag at Ramanathapuram
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் எம்.ஜி.ஆர். 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.திமு.க., சார்பில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கட்சி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். 101வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் அ.தி.மு.க., கட்சி கொடியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஏற்றி வைத்தார்.
ராமநாதபுரம் காயக்காரிஅம்மன் கோயில் தெருவில் கட்சி கொடியை ஏற்றியபின் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது, ராமநாதபுரம் நகர் மக்களின் அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக ராமநாதபுரம் நகரில் உள்ள முகவை ஊரணி, நொச்சியவல் ஊரணி, நீலகண்டி ஊரணி, செம்மண்குண்டு ஊரணி, சிதம்பரனார் ஊரணி உள்ளிட்ட ஊரணிகள் தண்ணீர் இன்றி வறண்டு இருந்தது.
எனது முயற்சியால் முதல்வரிடம் கோரிக்கை வைத்து வைகையிலிருந்து தண்ணீர் ராமநாதபரம் மாவட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டு துார்ந்து போன கண்மாய்கள், ஊரணிகள், வரத்துக்கால்வாய்கள் துார்வாரி ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு அனைத்து கண்மாய்கள், ஊரணிகளுக்கும் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு பின் ஊரணிகள் தண்ணீர் நிரம்பி உள்ளதை கண்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து மனமார நன்றியை தெரிவித்தவண்ணம் உள்ளனர். தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி சாலை, மருத்துவ கல்லுாரி வசதி, நலத்திட்ட உதவிகள் என அனைத்திலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.
இன்னும் மக்களின் தேவைகள் எதுவாயினும் உடனடியாக செய்து கொடுக்க தயாராக உள்ளேன், என்றார்.
விழாவில் ராம்கோ தலைவர் மற்றும் அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், முன்னாள் நகராட்சி தலைவர் ராமமுர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் வீரபாண்டி, ஆரிப்ராஜா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.