Komari disease vaccine for Perambalur district cattle – Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இந்நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். இதன் காரணமாக கால்நடைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் பாதிக்கப்படு, மிகவும் மெலிந்துவிடும்.
வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைப்பு ஏற்படும், பால் கறவை மிகவும் குறையும், கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி இறக்கவும் நேரிடும். எனவே இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம்.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினரால் கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 13-வது சுற்றின் கீழ் 2017-ம் வருடம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆதலால் கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 4 மாத வயதுள்ள கன்று முதல் சினை, மற்றும் கறவை பசு உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.