Jallikattu at Kariyaperumalputhur near Namakkal: 15 Youths injured
நாமக்கல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 281 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகளை அடக்க முயன்ற 15 காளையர்கள் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. நாமக்கல் எம்.பி. சுந்தரம், சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன், நாமக்கல் கோட்டாட்சியர் (பொ) துரை ஆகியோர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தனர். அனைத்து மாடுபிடி வீரர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. போட்டியில் 281 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாட்டு உரிமையாளர்களின் பெயருடன் சேர்த்து படித்து வாடிவாசல் வழியாக காளைகள் திறந்துவிடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர். அப்போது காளைகள் முட்டியதில் 15 பேர் லேசான காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர்கள் சோபா, கட்டில், மிக்ஸி, குக்கர், தங்கக்காசு, வெள்ளி அரைஞாண் கயிறு, குடம், சேர் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, போட்டி நடைபெறும் இடம் முழுவதும் மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் தடுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டுக் காளைகள் வெளியே வரும் வாடிவாசல் முதல் சில அடி தூரம் வரை தேங்காய் நார் கொட்டி பரப்பி விடப்பட்டிருந்தன.
காளைகள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே போட்டி நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் துவங்கின. மாலை 2.30 மணி வரை மொத்தம் 281 காளைகள் போட்டியில் விடப்பட்டன. 200 மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டி நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியின்போது, காளைகள் முட்டிக் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவோர் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.