Jallikattu: 8 people injured in Kolathur near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அதன்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினரின் கண்காணிப்பின் கீழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாவட்ட வருவாய் அலுவலர ஆ.அழகிரிசாமி முன்னிலையில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாடு பிடி வீரர்களின் பெயர்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இரண்டு கட்டங்களாக மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க களமிரக்கப்பட்டனர்.
பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள வந்து காளை மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்பட்டுள்ளனவா, போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்று கால்நடை பராமரிப்புத்துறையினர் மூலமாக சான்றளிக்கப்பட பின்னரே மாடுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டன.
மேலும், சுகாதாரத்துறையின் மூலம் மாடு பிடி வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் போது அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவக்குழுவினருடன், அவசர கால ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன.
காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற போட்டியில் பெரம்பலூர் அரியலூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 350 காளைகள் பதிவுசெய்யப்பட்டு, வருகைபுரிந்த 215 காளைகளில் போதிய வயதில்லாத காரணத்தால் 05 காளைகள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 210 காளைகள் போட்டிகளில் பங்கேற்றது.
அதேபோல 119 மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்திருந்து பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக் குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இன்றைய போட்டியில் பார்வையாளர்கள் 02 நபர்களுக்கும், மாடுபிடி வீரர்கள் 06 நபர்களுக்கும் என மொத்தம் 08 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய், காவல், கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.