In the Perambalur district collector’s office, the Collector, the officers take Pledge of untouchability

பெரம்பலூர் : தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாளான இன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

“இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் – குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்ப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.

தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம் வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.

இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்” என மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதற்கு முன்னதாக இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இருதயமேரி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!