Husband and wife commit suicide after childlessness near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் (வயது 35), ரேவதி (வயது 30) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் அதே ஊரில் வணங்காமுடி என்பவருக்கு சொந்தமான ஓடு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வணங்காமுடியின் மனைவி அம்பிகா கதவை தட்டி, ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் விட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட பொது மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்

மேலும் இதுகுறித்து, தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமகிருஷ்ணன் மற்றும் ரேவதியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராமகிருஷ்ணனின் பெற்றோர்கள் ராமலிங்கம்-தனலட்சுமி அளித்த வாக்குமூலத்தில்.,,

கூலி வேலை செய்து வந்த எங்களது மகன் ராமகிருஷ்ணனுக்கும், செங்குணம் கிராமத்தை சேர்ந்த பிச்சைபிள்ளை-தங்கம்மாள் தம்பதியினரின் மகள் ரேவதிக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை.

இந்நிலையில் ராமகிருஷ்ணன் கடந்த ஆண்டு டூவீலரில் சென்ற போது நிகழ்ந்த சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தினால் சற்று பார்வை குறைபாடு இருந்து வந்தது. இதனாலும், திருமணமாகி 13 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத விரக்தியாலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதன் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களையும் கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!