DMK rule should be blossomed in Tamil Nadu to maintain social justice; Vaiko Talks Supporting IJK Parivendhar!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பேசியதாவது:
இந்தியாவில் அடுத்து மலர்வது ஜனநாயகமா அல்லது பாசிசமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஜனநாயகத்தை காப்பாற்ற உங்களை வேண்டுகிறேன். இந்தியாவில் இருந்து மதச்சார்பின்மையை அகற்ற பாஜக பிரயத்தனப்படுகிறது.
மதச்சார்பின்மையை வலியுறுத்திய, மகாத்மா காந்தியின் உருவத்தை இந்துமகாசபா அவமதிக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற நிலை உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்காத இந்த அரசு இருந்த வேலை வாய்ப்புகளை பறிபோகச் செய்துள்ளது.
தமிழக அரசின் அலட்சியத்தால் இங்கு அமைய வேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் 25 கோடி பேருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த திட்டம் சாத்தியமில்லை என பாஜக கூறுகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தத் திட்டத்தை முறைப்படுத்தி செயல்படுத்தினால் சாத்தியம்தான் என கூறியுள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்ட ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும். மேலும் சமூக நீதியை நிலைநாட்ட தமிழகத்தில் திமுக ஆட்சி மலர வேண்டும். 18 சட்டசபை தொகுதிகளில் திமுக வெற்றிபெறும். 40 லோக்சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக அரசு அகற்றப்படும். மத்தியில் ஜனநாயகத்தைக் காக்க திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தந்து மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக்க வேண்டும்.
பெரம்பலுார் மாவட்டத்தில் நிறைவேற்றப்படாமல் அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்ட கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் விரிவாக்கத்திட்டம், மருத்துவக்கல்லுாரி, ரயில் பாதை திட்டம், வெங்காய பதனக்கிடங்கு போன்ற திட்டங்களை நிறைவேற்ற பாரிவேந்தரை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
கூட்டத்தில் திமுக நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாரிவேந்தரை ஆதரித்து. அம்மாபாளையம், துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட் பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக, காலை முதல் மதியம் வரை வேட்பாளர் பாரிவேந்தார், புலிவலம், பெரமங்கலம், செல்லாங்கரை, உடையாம்பட்டி, பெரிய காட்டுக் குளம், தண்ணீர் பந்தல், மூலனூர், முவானூர், மணியம்பட்டி, அய்யம்பாளையம், ராயப்பட்டி, திருத்தியமலை, சுக்காம்பட்டி, தண்டலை, தண்டலைபுத்தூர், பொன்னாங்கண்ணி பட்டி, நெய்வேலி, பூசாரிபட்டி, கோமங்கலம், காவேரி பாளையம், வடக்கு சித்தாம்பூர், தெற்கு சித்தாம்பூர், கல்லூர் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுட்டார்.
பொன்னாங்கண்ணி பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பாரிவேந்தருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கவுரப்படுத்தினர்.
பாரிவேந்தருக்கு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆதருவு :
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு வேந்தரை சந்தித்து ஆதரவை தெரிவித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தரை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
விவசாயகளுக்கு எல்லா உதவிகளையும் ஐயா பாரிவேந்தர் செய்து தருவேன் என்று உறுதியளித்தார். அதன் அடிப்படையில் நாங்கள் எங்களது ஆதரவை தெரிவித்துளோம்.
ராகுல் காந்தியும் மோடியும் எங்களை அழைத்து பேசாவிட்டால் வாரணாசியில் கண்டிப்பாக நாங்கள் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.