According to the Gram Panchayat, petitioner requested to remove the liquor bar at Perambalur.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு:
பிலிமிசை கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அந்தக்கடையினால், சுற்றியுள்ள கூத்தூர், ஆதனூர், இலுப்பைக்குடி, கொட்டரை, கூடலூர் சாத்தனூர் ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தாழ்வுமனப்பான்மையும் கல்வியறிவு குன்றியும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
குடிப்பழக்கத்தினால் பலஆண்கள் உயிரிழந்து குறுகிய சில காலங்களிலே 40 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவையாகி வாழ்க்கை இழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கிராம பொதுமக்களால் அரசு மதுபானக்கடையை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மான நகலையும் இந்த கோரிக்கை மனுவுடன் இணைத்துள்ளதாகவும், எனவே, மாவட்ட ஆட்சியர் அரசு மதுபானக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.