7 Tamil liberation has no objections: Governor can no longer delay! PMK Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை விதிக்க முடியாது என்றும், இவ்விஷயத்தில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்துத் தடைகளும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். 7 தமிழர் விடுதலைக்கு எதிராக அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில், அவர்களை விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9&ஆம் தேதி பரிந்துரை செய்தது. அது ஆளுனரின் ஆய்வில் இருந்த நிலையில், அப்பாஸ் உள்ளிட்ட சிலர் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி தமிழக ஆளுனர் பன்வாரிலாலை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப் படும் வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

அந்த வழக்கைக் காரணம் காட்டித் தான் 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதை தமிழக ஆளுனர் தாமதப்படுத்தி வந்தார். அத்தகைய சூழலில் 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு தேவையற்றது; அவர்களின் கோரிக்கை காலாவதியாகி விட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போதே, இவ்வழக்கு எந்த நேரமும் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், அதுவரை காத்திருக்காமல் 7 தமிழர்கள் விடுதலை குறித்த அரசாணையை தமிழக ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்தியிருந்தேன்.

அந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 7 தமிழர் விடுதலைக்கு எதிராக அப்பாஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான அனைத்துத் தடைகளும் நீக்கப் பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 7 தமிழர் விடுதலை குறித்து, அமைச்சரவை அளித்துள்ள பரிந்துரைப்படி ஆளுனர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 243 நாட்கள் ஆகி விட்டன. இதுபற்றி பல்வேறு கட்டங்களில் வினா எழுப்பப்பட்ட போதெல்லாம், ஆளுனர் மாளிகைத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்ட காரணம்… 7 தமிழர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது தான். அந்த வழக்கு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், 7 தமிழர் விடுதலைக்கு தடையில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முதன்மையானது 7 தமிழர்கள் விடுதலை ஆகும். இந்த கோரிக்கையை கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வலியுறுத்தியதுடன், மனுவாகவும் அளித்தேன். அதன்பின்னர் 7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் குறிப்பிட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூடுதல் முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் பயனாக 7 தமிழர்களின் விடுதலை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரிகிறது.

7 தமிழர்கள் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 8 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் அவர்களின் விடுதலையை ஆளுனர் இனியும் தாமதிப்பது முறையல்ல. அரசின் பரிந்துரை மீது ஆளுனர் முடிவெடுக்க அரசியல் சட்டத்தில் கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதைக் காரணம் காட்டி 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தக் கூடாது. விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுனர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 7 தமிழர்கள் தங்களின் ஒரு நாள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அடுத்த சில நாட்களில் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கவும், இயல்பான வாழ்க்கையை வாழவும் ஆளுனர் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!