பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற மற்றும் பள்ளி வேலையில் சொந்த வேலைக்காக மாணவர்களை வெளியே அனுப்பிய 2 ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள மானிய நடுநிலைப் பள்ளியில் ஆவினங்குடியை சேர்ந்த கொளஞ்சிநாதன் (45) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். இவர், 8 ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதோடு, பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் கொளஞ்சிநாதனை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி சீருடையில், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வாங்குவதற்காக பிளஸ் 1 மாணவர்கள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி பள்ளி மாணவர்களை அழைத்து நேரில் விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவர்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயில்வதும், அங்கு பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர் ராஜாக்கண்ணன், பட்டா வாங்கி வர அனுப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நேரத்தில் மாணவர்களை சொந்தப்பணிக்காக ஈடுபடுத்திய ஆசிரியர் ராஜகண்ணன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் (பொ) மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, தொழிற்கல்வி ஆசிரியர் ராஜகண்ணணை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.