பெரம்பலூர்: பெரம்பலூரில் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், தாமோதரன், ரவிக்குமார், ராஜா, கார்த்திகேயன், முருகேசன், திரிபுரா, படைகாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன், மாநில கொள்ளை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் அன்புதுரை, வேந்தர் பேரவை மாநில அமைப்பாளர் பாஸ்கர் உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பேசுகையில், தமிழகத்தில் இந்திய ஜனநாயக கட்சி 64 மாவட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதில் இது வரை 15 மாவட்டங்களில் பொறுப்பாளர்களின் கருத்துகேட்பு கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
மீதமுள்ள மாவட்டத்திலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து கூட்டங்களின் ஒட்டு மொத்த கருத்துக்களை கொண்டு வரும் சட்டசபை தேர்தலில் ஐஜேகே செயல்படும்.
மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் 6 மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலம் வீதம் 5 மண்டல மாநாடு இன்னும் 3 மாதத்தில் நடைபெறவுள்ளது.
அதை தொடர்ந்து மாநில மாநாடு தமிழகத்தில் 2 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடுகளில் மக்கள் சக்தியை நாம் (கட்சியினர்) அதிகளவில் திரட்டவேண்டும்.
அதிமுக, திமுக இரண்டு கட்சியுமே லஞ்சம், ஊழலில் ஈடுப்பட்டுள்ளது.
மக்கள் சேவை செய்யத்தான் ஐஜேகே துவக்கப்பட்டது. அதனால் மக்கள் நலன் மற்றும் பிரச்சனைக்காக என்றென்றும் போராடும்.
மது ஒழிப்பு, இலவசம் தவிர்த்தல், பெண்களுக்கு முன்னுரிமை போன்ற கொள்ளைகளை கொண்டது ஐஜேகே கட்சி.
அதனால் மது ஒழிப்பு அமுல்படுத்தக்கோரி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என் பேசினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் வக்கீல் ரெங்காஸ் வரவேற்றார். ஒன்றிய தலைவர் பாக்யராஜ் நன்றி கூறினார்.