NEETIn the Namakkal district, Wrote 5,402 people at 7 centers.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) இன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் 5402 பேர் தேர்வு எழுதினார்கள். 159 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இத்தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் நேஷனல் பப்ளிக் பள்ளி, டிரினிடி அகாடமி, பாரதி அகாடமி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, நவோதயா அகாடமி மற்றும் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இடங்களில் 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் நாமக்கல் மற்றும் பல்வேறு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 5,560 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 255 மாணவ மாணவிகளும் நீட் தேர்வு எழுத ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். தேர்வில் 158 பேர் கலந்துகொள்ளவில்லை. மொத்தம் 5402 பேர் தேர்வு எழுதினார்கள்.
தேர்வுக்கு மாணவ மாணவிகள் பெற்ற ஹால்டிக்கட்டுகளில் அவர்கள் தேர்வுக்கூடத்திற்கு வரும் நேரம் முதல் பகுதி தேர்வர்களுக்கு காலை 7.30 மணி என்றும் இரண்டாவது பகுதி தேர்வர்களுக்கு 8.30 மணி என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மாணவ மாணவிகள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
7.30 மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் 8.30 மணி வரையிலும், 8.30 மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் 9.30 மணிவரையிலும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்கு மேல் வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
மாணவ மாணவிகள் உடைகள் குறித்து ஏற்கனவே அவர்களுக்கு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தததால் பெரும்பாலான மாணவர்கள் அதை கடைபிடித்து வந்தனர். ஷாக்ஸ் பெல்ட் போன்றவை அனுமதிக்கப்படவில்லை.
முழுக்கை சட்டை அணிந்துவந்தவர்கள் அரைக்கை சட்ட அணியும்படி அறிவுறுத்தப்பட்டது. அரைக்கை சட்டை எடுத்து வராதவர்களின் முழுக்கை சட்டைகள் வெட்டப்பட்டு அரைக்கை சட்டையாக மாற்றப்பட்டது.
பெண்களுக்கும் அரைக்கை மேலாடையே அனுமதிக்கப்பட்டது. துப்பட்டா அனுமதிக்கப்படவில்லை. தலைமுடிக்கு ஹேர் பேண்ட், கிளிப் போன்வைகளும் அனுதிமக்கப்படவில்லை. மெல்லிய ரப்பர் பேண்ட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.