Grievance Day Camp at the Ration shops in Namakkal District
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன.,19) நடத்தப்பட உள்ளது. நாமக்கல் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் கொண்டிசெட்டிப்பட்டி நியாய விலைக்கடை , சேந்தமங்கலம்; தாலுக்கா கூலிப்பட்டி நியாய விலைக்கடை,ராசிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுபோல், கொல்லிமலை தாலுக்காவிற்கு உட்பட்ட காரமனிகாடு நியாய விலைக்கடை, மோகனூர் தாலுக்காவிற்கு உட்பட்ட ஒருவந்தூர் நியாய விலைக்கடை, திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் நியாய விலைக்கடை மற்றும் குமாரபாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஓலப்பாளையம், பரமத்தி வேலூர் தாலுக்காவிற்கு புஞ்சை இடையார் நியாய விலைக்கடை என, மொத்தம் 8நியாய விலைக் கடைகளில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இதில், பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளகின்றனர். எனவே பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை தொடர்பான திருத்தம் மற்றும் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் முகாம்களில் தெரிவிக்கலாம். குறைகள் ஏதேனும் இருந்தால் அதற்கான தீர்வு விரைந்து பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.