இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்னறன.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்கானிக்க பறக்கும்படை, தீவிர கண்கானிப்பு குழு, வீடியோ வியூவிங் குழு, ஊடக கண்கானிப்பு மற்றும் சான்றளிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
வாக்காளர்களின் வசதிக்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சேவை மையங்களின் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்காளர்களின் குறைகளை களைவதற்கும், வாக்காளர் பட்டியல் தொடர்பான மேலும் பல தகவல்களை பெறுவதற்கும் இச்சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.