பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு:
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் 63 வகையான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், மேல்தோல் முடிகள் அதிகம் வளர்ந்தும் காணப்படும். பால் கறவை குறையும். கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும்.
எனவே இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப்பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 10-வது சுற்றின் கீழ் 2016-ம் வருடம் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆதலால், கால்நடைகளை வளர்ப்போர் கன்று முதல் சினைவரையுள்ள கால்நடைகள், மற்றும் கறவை பசு உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்போட கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் நடத்தப்படும் தடுப்பூசிபோடும் பணிகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.