1 சதவீதம் கலால் வரி மீண்டும் சுமத்தப்பட்டுள்ளதை எதிர்த்தும் 2 லட்சம் ருபாய் அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து,
இந்திய அரசாங்கத்தின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணைப் பெறுவதைக் கட்டாயமாக்கியிருப்பதை எதிர்த்தும் புதன்கிழமை முதல் இந்த போராட்டம் நகைக்கடைகள் அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
2 லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்க பான் கார்டு கட்டாயம் என்பது நடைமுறை சாத்தியமில்லாத திட்டம் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பிப்ரவரி 10 ஆம் தேதியன்று நாட்டின் பிற பகுதிகளிலும் தமிழகத்தில் பிப்ரவரி 11 ஆம் தேதியன்றும் இதுதொடர்பாக தங்க நகை விற்பனையாளர்கள் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு தங்களின் கோரிக்கையை ஏற்காததால், அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்திக்க ஆபரண நகை வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு திட்டமிட்டனர்.
ஏற்கனவே நகை வணிகம் சரிவை சந்தித்து வருவதாலும், அதிக கட்டுப்பாடுகளால் தங்க கடத்தல் அதிகரிப்பு தொடர்வதாலும் தங்க நகை வியாபாரிகள் நலிவுற்று வருவதாக தெரிவித்தனர்.
நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களில் பெண்கள்தான் அதிகம் என்றும், அவர்களிடம் பெரும்பாலும் பான் கார்டு இருப்பதில்லை என்றும், அத்தோடு அவர்களை பான் கார்டுக்கு விண்ணப்பிக்க செய்யும் முகவர்களாக, நகை வியாபாரிகளை அரசு மாற்றுகிறது என்றும் குற்றம் சாட்டியும், தங்க நகைகளைப் பொறுத்தவரை 10 லட்சம் ரூபாய் வரை வரம்பு அளிக்க வேண்டும் என்றும் பெரம்பலூரில் நகைக்கடை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.