திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 308 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் தலா ரூ.3800 மதிப்பிலான சலவை பெட்டிகளை 9 நபர்களுக்கும், தலா ரூ.3386 மதிப்பிலான தையல் இயந்திரங்களை 32 நபர்களுக்கும் என 41 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து,42 ஆயிரத்து 552 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியர்கள் (சமூக பாதுகாப்புத் திட்டம்) , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.